அனுமன் கவசம் தமிழில்

அல்லல் போக்கும் ஆஞ்சநேயர் கவசம்!

நவகிரகங்களின் தலைவர் சூரியன். ஆரோக்கியத்தின் ஆதாரமாக விளங்குபவர். சூரியனின் அருளைப் பெறவும். ஸ்ரீ ராமனின் அருளைப் பெற அனுமனைத் துதிப்பது அவசியம். அனுமன் கவசத்தை துதித்துவர ஆரோக்கியம் சிறக்கும். மனதில் நிறந்த மகிழ்ச்சியும், உற்சாக வாழ்க்கையும் பெற்றிடலாம்.ஸ்ரீ ராமனின் மிகவும் தீவிர பக்தன் ஆஞ்சநேயர். இவரை வணங்கி வர ஸ்ரீ ராமரின் அருளோடு எல்லா தெய்வங்களின் அருள் கிடைக்கும்.

Sri Anjaneyar


ஆஞ்சநேய கவசம் சக்திவாய்ந்த கவசம், அனைத்து தீய சக்திகளிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது, துக்கத்தை நீக்குகிறது மற்றும் ஓதுபவர் ஹனுமனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்.

பணப்பிரச்சனை, வீட்டில் பிரச்சனை, எதிரிகளால் தொல்லை போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த அனுமன் கவசத்தை படித்து வந்தால் வழி பிறக்கும்.

துதிப்பயன்

அஞ்சனை மைந்தன்

அனுமனை போற்றிடின்

நெஞ்சினில் பலம் வரும்

வஞ்சனை போக்கிடும்

வாயுவின் புத்திரனால்

வல்வினை நோய் தீரும் நிஜம்

கவசம்

சிரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க

ஸ்ரீராம பக்தன் என் சீர் சடை காக்க.

நெறி மேவி நின்றவன்என் நெற்றியை காக்க

புவியினில் நீண்டவன்என் புருவங்கள் காக்க.

இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க

சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க

வீரத்தின் வீரன் என் விழிகளைக் காக்க

வீசிடும் காற்றோன் என் விழிமூடிகளைக் காக்க.

நாரணப் பிரியன்என் நாசியை காக்க

காரணப் பொருளே என் காலமே காக்க

முழுஞானம் கொண்டவன்என் மூக்கினை காக்க

வாக்கிலே வல்லவன் என் வாயினை காக்க

வெற்றிலை பிரியன்என் வெற்றியை காக்க

பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க

பல் வித்தை கற்றவன் என் பற்களைக் காக்க.

நல் மனம்; கொண்டவன்என் நாவினைக் காக்க.

நாடியே வந்தென்றன் நாடியை காக்க

தேடியே வந்தென்னை தேவனே காக்க

கரிமலை கடந்தவன் என் கன்னங்கள் காக்க

கடுகதியில் வந்தே என் கழுத்தினை காக்க

கயிலையின் வாசன் என் கைகால்கள் காக்க

கதிரவனின் மாணவன் கருணையாய்க் காக்க

நல்லருள் செய்பவன் என் நகங்களைக் காக்க

அல்லன அழிப்பவன்என் அகம் தனை காக்க

நெடு மேனியானவன்என் நெஞ்சினைக் காக்க

சுடு அக்னி வென்றவன் என் சூட்சுமம் காக்க

இடுக்கண் களைபவன் என் இடுப்பினை காக்க

இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க

தோள் வலிவு கொண்டவன் என் தோள்களை காக்க

தோன்றிய புகழவன்என் தொடைகளைக் காக்க

குரங்கினத் தலைவன்என் குறியினைக் காக்க

குருவாகி வந்துஎன் குருதியை காக்க

திசையெல்லாம் திரிந்தவன்என் தசையினை காக்க

விசையென்ப பாய்ந்து என் செவிகளை காக்க

நடுவாகி நின்று என் முதுகினை காக்க

நவின்றிடும் தேவன் என் நரம்புகள் காக்க

ஒன்பது வாசலை ஒப்பிலான் காக்க

புண்படா வண்ணம் புண்ணியன் காக்க

இளமையும் முதுமையும் இனியவன் காக்க

இரவிலும் பகலிலும் இமையெனவே நீ காக்க

உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்க

கலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்க

நிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்க

சிலையென இருந்தென்னை சீலனார் காக்க

இராமனின் பக்தன் என் இதயத்தை காக்க

சுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்க

உடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்க

கடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்க

வளமிக்க வாழ்வினை வாயுமகன் காக்க

வாழையடி வாழையாய் வாழ்திடக் காக்க

எம்மை எந்நாளும் உன் நிழலினால் காக்க

இம்மையிலும் மறுமையிலும் ஈடிலான் காக்க

நோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்க

தாய்போலவே தயவுடன் என் மேனி காக்க

நவகோளின் தோஷம் நீக்கி நாளும் நீ காக்க

தவக்கோலம் கொண்டவன் தயவுடன் காக்க

தீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க காக்க

தீராத செல்வங்கள் வந்திடக் காக்க காக்க

ஈரேழு புவனத்து உறவுகள் காக்க

பாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்க

பஞ்ச பூதங்கள் எனைப் பகைக்காது காக்க

வஞ்சங்கள் சேராது என் மனம் தனை காக்க

பில்லி பேய் சூன்யங்கள் நெருங்காது காக்க

பிள்ளை என்றனை நீ பிரியமாய் காக்க

அரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்க

இரக்கமறு மாந்தர்கள் எதிர்இன்றி காக்க

சிறைசென்று வாடாமல் சீருடன் காக்க

மறையெலாம் போற்றும் உந்தன் மலரடிகள் காக்க

இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்க

பொல்லாத பசி எனை அண்டாது காக்க

கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்க

கலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்க

செய்தொழில் கருமங்கள் செய்வதை காக்க

மெய் வருந்தாமல்எனை மேன்மையாய்க் காக்க

புலத்திலும் நிலத்திலும் புத்திரனாய் நீ காக்க

தவத்திலே வந்து உன் தனையன் எனைக் காக்க

கொடுவிஷ ஜந்துகள் கொட்டாது காக்க

கொடுமைகொள் நுண்ணுயீர் வாட்டாது காக்க

வானமும் வையமும் வளம் பெறக் காக்க

தானமும் தர்மமும் தழைத்திடக் காக்க

நல்லோர்தம் உறவுகள் நலிவின்றி காக்க

வல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்க

கனவிலும் நனவிலும் கருத்துடன் காக்க

உன் நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்க

மானத்தில் பங்கங்கள் நேராது காக்க

ஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்க

நீள்ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்க

வால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்க

மரணத்தின் வாசலில் மாருதி காக்க

சரணத்தை தந்தெனை அரணெனக் காக்க

பிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்க

பிறவாமை தந்தெனை பிரியமாய்க் காக்க

முனிவரும் தேவரும் எனக்கு அருள் செய்யக் காக்க

பனிதரும் திங்களென ஒளி தந்து நீ காக்க

இனிவருங் காலங்கள் இனித்திடக் காக்க

பிணி ஏதும் வருந்தாமல் என் அணி செய்து காக்க.

பார்க்க நீ பார்க்க உன் திருவிழிகள் பார்க்க என்

பாவங்கள் போக்க உன் இருவிழியால் பார்க்க

தீர்க்க நீ தீர்க்க என் தீவினைகள் தீர்க்க

தீர்க்கத் தீர்க்க உன் திருவிழியால் பார்க்க

வார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்க

காக்க நீ காக்க உன் கதி தந்து காக்க

ஆஞ்சநேயனே காக்க வாயுமைந்தனே காக்க

ராம பக்தனே காக்க ராம பக்தனே காக்க

ஸ்ரீராம தூதனே காக்க ஜெயராம தூதனே காக்க.

Powered by Blogger.