வாழ்வு தரும் விநாயகர்
எளிய தெய்வம், இனிய தெய்வம் விநாயகர். தெருவோரம் எங்கும் இருப்பதால் எளிமையானவர். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்புவதால் இனிமையானவர். 'வி' என்றால் விசேஷமான, 'நாயகர்' என்றால் தலைவர். விஷேசமான தலைவர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி. சிறுபிள்ளையாக இருந்தாலும் 'ஆர்' என்ற மதிக்கும்படியாக 'பிள்ளையார்' என போற்றப்பட்டார். இவரை வழிபட்டால் தடைகள் அகலும்.
அடக்க உதவும் அங்குசம் இவரது கையில் இருப்பதால், யானையான தன்னை அடக்கும் சக்தி தனக்கே உண்டு என காட்டுகிறார். நம்மை அடக்கும் சக்தி மற்றவரிடமோ அல்லது நமக்கு வெளியிலோ இருப்பதாக நினைக்க கூடாது. அடக்கும் சக்தி நம்மிடமே உள்ளது என்கிறார்.
பசுஞ்சாணம், களிமண், மஞ்சள் என எதைப் பிடித்தாலும் விநாயகர்தான். 'பிடிச்சு வச்சா பிள்ளையார்' என்றே சொல்வர். மஞ்சள், சந்தனம், சாணம், களிமண், எருக்கு வேர் என அனைத்திலும் அருள்புரிபவர் இவரே. அருகம்புல், எருக்கம்பூ என எளிய பூக்களை விரும்பி ஏற்பார். ஆனால் பக்தர்களுக்கு அருள்வதில் இவருக்கு நிகர் இவரே. அருகம்புல் அர்ச்சனை செய்தால் விரும்பும் பதவிகள், மேலுலக வாழ்வு விநாயகர் அருளால் கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.
விநாயகர் விரும்பும் நைவேத்யம் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே!
மண்ணில் விநாயகர் சிலை செய்து வழிபட்டு தண்ணீரில் கரைப்பது தத்துவ வழிபாடு. உயிர்கள் மண்ணில் தோன்றுகின்றன. முடிவில் சாம்பலானதும் நீரில் கரைகின்றன. இதை உணர்த்தவே மண் விநாயகரை மூன்று நாள் வழிபட்டு பின்னர் நீர்நிலையில் கரைக்கிறோம்.
இவரை வழிபடும் போது 'ஓம் காம் கணேஸாய நமஹ' என்னும் மந்திரத்தை ஜபிக்கலாம். அவ்வையார் பாடிய விநாயகர் அகவலை படிக்கலாம்.