மார்கழி 30-ஆம் நாள் - திருப்பாவை 30-ஆம் பாசுரம்: வங்கக்கடல் கடைந்த மாதவனை

ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடல்களை பலரும் மிகவும் சாதாரணமாக நினைக்கிறார்கள். இதை மார்கழி மாதத்தில் மட்டும் தான் பாட வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் திருப்பாவை பாடல்களை வருடத்தின் அனைத்து நாட்களிலும் பாடி, வணங்குவது மிகவும் மிக உயர்ந்த பலனை தரும். இதை படிப்பதால் ஆண்டாளின் அருள் கிடைப்பதுடன், பெருமாளின் அருள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். திருப்பாவையின் 30 பாடல்களையும் மார்கழி மாதத்தில் படித்து, பக்தி செய்வது மிகவும் புண்ணிய பலனை தரும்.

திருப்பாவை 30-ஆம் பாசுரம் வங்கக்கடல் கடைந்த மாதவனை

மார்கழி மாதத்தில் பாவை நோன்பின் பெருமைகள், நோன்பு கடைபிடிக்கும் முறை, கண்ணனின் பெருமைகள், கண்ணனின் அருள் எப்படிப்பட்டது என்பதை திருப்பாவையின் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாக விளக்கிய ஆண்டாள் நாச்சியார், நிறைவாக 30ஆம் பாடலில் திருப்பாவை படிப்பவர்களுக்கு என்னவெல்லாம் பலன் கிடைக்கும் என்பதையும் விளக்கி உள்ளார். அதே போல் திருவெம்பாவையின் முதல் 20 பாடல்களில் சிவ சின்னங்களின் பெருமைகளை விளக்கிச் சொன்ன மாணிக்கவாசகர், இதைத் தொடர்ந்து திருப்பள்ளியெழுச்சியின் 10 பாடல்களில் இறைவனை இனிமையான விஷயங்களுடன் ஒப்பிட்டு, தூக்கத்தில் இருக்கும் இறைவனிடம் அருளை வேண்டுவதாக அமைத்துள்ளார்.

திருப்பாவை பாடல் 30:
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:
ஓயாத அலைகளை உடைய பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், அந்த பாற்கடலை கடைவதற்காக கூர்மமாக அவதாரம் எடுத்த மாதவனை, கேசி என்ற அசுரனை வதம் செய்த கேசவனை, நிலவு போன்ற அழகிய முகத்தை உடைய ஆயர்குலப் பெண்கள் வணங்கி பாவை நோம்பு கடைபிடித்தார்கள். கண்ணனிடம் மன்றாடி அவனது அருளை பெற்றனர். அவர்கள் பாவை நோன்பு இருந்த விதம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் பிறந்த நம்மாழ்வாரின் மகளான கோதை, அழகிய தமிழால் பாடி பாடல்களாலேயே மாலை சூட்டினாள். அவள் பாடிய இந்த 30 பாடல்களையும் பாடி அழகிய இரு தோள்களை உடையவனும், சிவந்த அழகிய கண்களை உடையவனும், செல்வத்திற்கு அதிபதியுமான திருமாலை பாடுபவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும், இறை அருளும் எப்போதும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு எப்போதும் இன்பமாக வாழும் வாழ்க்கை அமையும்.
Powered by Blogger.